"முஸ்லிம்களைப் பொறுத்தவரை தன்மானமுள்ளவர்கள், சுய கௌரவமுள்ளவர்கள். ராஜபக்ச அரசு ஜனாசாக்களை எரிப்பதற்கு முன்வந்திருப்பதன் காரணமாக இந்த ஆட்சியை அவர்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள் என்பது நிச்சயமாகும்."
- இவ்வாறு தெரிவித்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான ரவூப் ஹக்கீம்.
"கருணா அம்மான், கே.பி. போன்றவர்கள் தேர்தல் காலங்களில் பேசு பொருளாகின்றார்கள். கருணா அண்மையில் தெரிவித்த கூற்றால் படையினருக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு அரசு என்ன சொல்கின்றது. 2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்திலும் கே.பி. எனப்படும் பத்மநாதன் விவகாரம் சூடுபிடித்தது. பின்னர் என்ன நடந்தது?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"கருணாவின் கூற்றால் ஆளும் தரப்பு சங்கடத்தில் இருக்கின்றது. தெற்கில் சிங்கள பௌத்த மக்கள் அதனால் குழம்பிப் போயிருக்கின்றார்கள். படையினர் குறிப்பாக இராணுவத்தினர் தாம் அவமானப்படுத்தப்பட்டனர் எனக் கருதுகின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தவர்களில் கருணாவும் ஒருவராக இருக்கின்றார். இப்போது அவரைத் தம்மிலிருந்து வேறுபடுத்திக் காட்டி தப்பித்துக்கொள்ள ஆட்சியாளர்கள் எத்தனித்து வருகின்றனர்.
முந்திய பொதுத் தேர்தல் காலத்தில் கே.பி. மலேசியாவில் கோலாலம்பூரில் வைத்து கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு இரகசியப் பொலிஸாராலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினராலும் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் என்ன நடந்து விட்டது?
பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு கே.பியும் பொறுப்புக் கூறவேண்டும். அரசு அவரைக் கையேற்ற பின்னர் அவரிடமிருந்தது எனக் கூறப்பட்ட 06 கப்பல்களுக்கும் என்ன நடந்தது? அவர் தான் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சர்வதேச மட்டத்தில் நிதி சேகரிப்பவராக இருந்தார் எனக் கூறினார். அவரிடமிருந்த பணத்துக்கு என்னவானது? சொத்துக்கள் எங்கே?
பின்னர் அவர் வடக்கில் சர்வ சாதாரணமாக நடமாடுகின்றார். இத்தகையவர்களெல்லாம் தேர்தல் காலங்களில் மட்டும் மக்கள் மயப்படுத்தப்படுகின்றனர். அவ்வளவுதான்.
இப்போதெல்லாம் தேசப்பற்றைப் பற்றிப் பெரிதாகக் கதைக்கின்றார்கள். ராஜபக்ச குடும்பத்தினரைப் போன்ற தேசப்பற்று இந்த நாட்டில் வேறு எவருக்கும் கிடையாது என்றவாறு கதையளக்கின்றனர். இதுவும் ஒரு தேர்தல் காலத்தின் உச்சத்தை எட்டுகின்றது.
ஒரு யுக மாற்றத்துக்கான தேவை ஏற்பட்டிருக்கின்றது. புதிய ஆட்சியை அமைப்பது எங்களது இலக்குகளில் ஒன்று. அடுத்தது ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கம் ஐக்கிய தேசியக் கட்சியைக் கைப்பற்றுவதாகும்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை தன்மானமுள்ளவர்கள், சுய கௌரவமுள்ளவர்கள். ராஜபக்ச அரசு ஜனாசாக்களை எரிப்பதற்கு முன்வந்திருப்பதன் காரணமாக இந்த ஆட்சியை அவர்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள் என்பது நிச்சயமாகும்" - என்றார்.